ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரு மகள்களை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இதனை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் குற்ற வழக்குகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர், 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், காவல்துறையினர் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா யோகா மைய தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஈஷா யோகா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களும் சொந்த விருப்பத்திலேயே ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கின் விசாரணையை மாற்றி உத்தரவிட்டனர்.