63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
118 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையவுள்ள இந்த வழித்தடத்தில் 128 ரயில் நிலையங்கள் கட்டப்படும் என்று கூறிய அவர், 2048-ஆம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1 கோடியே 80 லட்சத்தை எட்டலாம் என எதிர்பார்ககப்படும் நிலையில், அதற்கு தகுந்தவாறு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்ட நிதியை துரிதமாக ஒதுக்கீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.