சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து மீனவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து, மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் எனவும், உரிய உரிமங்கள் பெற்ற படகில் சென்று மீன்பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அதனை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்துவந்தது.
இதனால் வேதனையடைந்த மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மீனவர்களின் மனு மீது உடனடியாக பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.