ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அங்கு உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக வல்லரசுகளுடனான 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சர்வதேச பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக, ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டது.
2018ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த காலத்தில் , ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, ஈரான் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை வேகப்படுத்தியது.
ஒப்பந்தம் முறிந்ததில் இருந்து, ஈரான் அனைத்து வரம்புகளையும் மீறியது. சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பு கேமிராக்கள் சிதைக்கப்பட்டன. வியன்னாவை சேர்ந்த மிகவும் அனுபவம் மிக்க ஆய்வாளர்களை ஈரான் தடை செய்தது. யுரேனியத்தை 60 சதவீத தூய்மை என்பதிலிருந்து, 90 சதவீத தர நிர்ணய தூய்மைக்கு செறிவூட்டியது.
இப்போது ஈரானிடம் கிட்டத்தட்ட நான்கு அணு ஆயுதங்களை தயாரிக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது.
அதே ஆண்டு ,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ,ஈரான் இரகசியமாக அணு ஆயுத உற்பத்தி வேலைகளைச் செய்து வருகிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்திருந்தார்.
தற்போது ஈரானில், நத்தன்ஸ், ஃபோர்டோ, ஈஸ்பஹான், கொன்டப்,தெஹ்ரான் மற்றும் புஷேர் ஆகிய இடங்களில், அணுசக்தி நிலையங்கள் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
ஈரானின் முக்கிய அணுசக்தி மையம் நத்தன்ஸ் (Natanz) நகரத்தில் உள்ளது. தெஹ்ரானுக்கு தெற்கே மலைகளை ஒட்டிய சமவெளியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு ரகசியமாக இந்த அணு உலையை உருவாக்கி உள்ளது. இங்கே,பரந்த, நிலத்தடி எரிபொருள் செறிவூட்டல் ஆலை (FEP) மற்றும் தரைக்கு மேலே உள்ள பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலை (PFEP) என இரண்டு ஆலைகள் உள்ளன.
ஈரானின் இரண்டாவது அணு சக்தி நிலையம், ஃபோர்டோ பகுதியில், பூமிக்கு கீழே சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செறிவூட்டல் ஆலையில் 60 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம் செறிவூட்டப் படுகிறது. மேலும், ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான இஸ்பஹானின் புறநகரில் ஒரு பெரிய அணுசக்தி தொழில்நுட்ப மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் தான் யுரேனியத்தை யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடாக மாற்றப் படுகிறது.
அடுத்ததாக, புளூட்டோனியத்தை எளிதில் உற்பத்தி செய்யக் கூடிய வகையில், கன நீர் ஆராய்ச்சி உலை ஈரானின் கொன்டப் என்ற ஊரில் அமைத்துள்ளது. இங்கு புளூட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் போல அணுகுண்டின் மையத்தை உருவாக்க பயன்படுகிறது.
பாரசீக வளைகுடா அருகே புஷேர் நகரில் உள்ள அணுமின் நிலையம் தான் ஈரானின் முதல் வணிக அணு உலையாகும். ரஷ்ய எரிபொருளைப் பயன்படுத்தி இந்த அணு உலை இயங்குகிறது. மேலும், ஈரான் தலைநகர் ஈரானின் தெஹ்ரானில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையங்களில் ஒரு ஆராய்ச்சி உலை உள்ளது.
ஏற்கனவே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்நிலையில், ஈரானின் ஆணு ஆயுத நிலையங்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், போர் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.