அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் என்றும், அது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
வள்ளலாரின் 202-ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருஅருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று புத்தகத்தை வெளியிட, அதை பாலகிருஷ்ணன் தம்பையா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, 14 வள்ளலார் பக்தர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என தனது உரையை தொடங்கினார்.
பின்னர், சனாதன தர்மத்தை மேற்கோள்காட்டிய ஆளுநர், அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் ஆன்மா என்றும், சனாதன தர்மம் என்பது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் விளக்கினார்.
பிரதமர் மோடி வள்ளலாரின் மிகப்பெரிய பக்தர் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலக நாடுகளுக்கு வள்ளலாரின் கருத்துக்களை அவர் எடுத்து செல்வதாக பெருமிதம் தெரிவித்தார்.