நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவா் கே.சி.வேணுகோபால், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக, மக்களவைத் தலைவருக்கு, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.
பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. அதானி குழும நிறுவனங்களில் செபி தலைவா் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது.
அதன்பேரில் செபி தலைவா் மாதபி புரி புச், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் அக்டோபா் 24-ஆம் தேதி ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு, நிஷிகாந்த் துபே கடந்த மாதம் எழுதிய கடித விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் செபி போன்ற முக்கிய அமைப்புகள் மீது ஊழல் முத்திரையை குத்தி, நாட்டின் நிதி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் வெளிநாடுகளின் சதித்திட்டத்தின் ஓா் அங்கமாக கே.சி.வேணுகோபால் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், பொது கணக்குக் குழுவின் வரம்பில் வராத பிரச்னைகளை எழுப்புதன் மூலம், கே.சி.வேணுகோபால் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.