சென்னை மெரினா கடற்கரையில் சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள்
தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுத்தது.
கடலோரப் படையின் P8i ரக போர் விமானங்கள் வானில் பல்வேறு வடிவங்களில் பறந்து சாகசங்களில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து வானில் போர் புரியும் திறன் கொண்ட மிக் 29 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து காண்போரை கவர்ந்தது.
பின்னர் சிறிய இலகுரக சூப்பர்சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானில் வட்டமடித்து சாகசம் செய்தன. அப்போது இடி முழக்கத்துடன் வானையே அதிர வைக்கும் வகையில் பறந்த விமானங்களை பொதுமக்கள் கண்டுரசித்து மெய்சிலிர்த்தனர்.
பின்னர் வானில் பறந்தபடியே 3 விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய மிராஜ் 2000-ன் சாகசம் காண்போரை கவர்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரையும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கிய ரபேல் ரக அதிநவீன போர் விமானங்கள் வானில் பறந்தது காண்போர் கண்களை கொள்ளையடித்தது.
இந்த போர் விமானம் அதிக எடையை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது ஆகும். வானில் சீறிப்பாய்ந்த சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள் தீப்பொறிகளை உமிழ்ந்து மெய்சிலிர்க்கச் செய்தது.
இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புகையை கக்கியபடி வந்த 5 சாரங் ஹெலிகாப்டர்களை மக்கள் வியந்து பார்த்தனர். அப்போது புகையை கக்கியபடி வந்த ஹெலிகாப்டர்கள் வானில் ஹார்டின்களை உருவாக்கி காண்போர் மனதை கொள்ளையடித்துச் சென்றது.