ஈரான் ஏவிய பலநூறு ஏவுகணைகளை அயர்ன் டோம் உள்ளிட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இஸ்ரேல் போன்று எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிடம் உள்ளதா? ஏவுகணை சவால்களை எதிர்கொள்ள இந்தியா எந்த அளவு தயாராக உள்ளது? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இஸ்ரேல் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும், எதிரிகளிடமிருந்து அதன் சொந்த புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இஸ்ரேலின் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல், அனைத்து நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூரத்திலிருந்து, பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே பறக்கும் ஏவுகணைகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அயர்ன் டோம் மிகவும் பிரபலமானதாகும்.
அயர்ன் டோம் தவிர, டேவிட் ஸ்லிங், அரோ 2 மற்றும் 3, மற்றும் அயர்ன் பீம் ஆகிய பாதுகாப்பு அமைப்புக்களும் இஸ்ரேலிடம் உள்ளது.
புவி சார் அரசியல் சூழலில், , இந்தியாவும் அதன் அண்டை நாடுகளிடமிருந்து பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனாவும்,பாகிஸ்தானும் உள்ளன. இரண்டு நாடுகளும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல மேம்பட்ட ஏவுகணை திறன்களைக் கொண்டுள்ளன.
ராணுவத்தை நவீனமயமாக்கி வரும் சீனா, வலுவான ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்கி வைத்துள்ளது. அதன் மூலம், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தென் சீனக் கடலின் கரையோர மாநிலங்களை அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
DF-21 மற்றும் DF-26 ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளன. இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் (IRBMs) இந்திய எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் மூலம், இந்திய கடற்படை தளங்களைக் குறிவைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கக் கூடிய பாபர் க்ரூஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் உள்ளன. இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை வீசக்கூடிய திறன் கொண்டவை ஆகும்.
மேலும், நடுத்தர முதல் நீண்ட தூரம் வரை சென்று தாக்கும் கௌரி மற்றும் ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன. இதனால், இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் நாடெங்கும் உள்ள ராணுவ தளங்களையும் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் மேற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், சீனாவுடன் நட்புறவு பேணுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மட்டும் இல்லாமல், வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்தியா முதலீடு செய்து வருகிறது.
பிருத்வி ஏர் டிஃபென்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ் ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளாகும். வெவ்வேறு உயரங்களில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க இவை உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்வழி இலக்குகளை இடைமறித்து தாக்கக்கூடியதாகும். இந்த ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, ஒரு தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்பாகும்.
அண்மையில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் வான்வழி தாக்குதலுக்கு எதிராக S-400 வான்வழி பாதுகாப்பை ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. சுமார் 400 கிலோமீட்டர் வரையிலான 30 கிலோமீட்டர் உயரத்தில் வரும் ஏவுகணைகளை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், S-400 வான்வழி பாதுகாப்பு , ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
2021ம் ஆண்டில், பராக்-8 என்ற வான்-ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்திய விமானப்படை உருவாக்கியது. Barak-8, 70 கிலோமீட்டர் தூரம் வரை, எதிரியின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஆகியவற்றைத் தடுக்கும். இதனை,இந்திய விமானப் படை பாதுகாப்பில் ஒரு “கேம் சேஞ்சர்” என்று தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து வாங்கிய நவீன பாதுகாப்பு அமைப்புகளுடன் இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலைப் போலவே, இந்தியாவும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புக்களைக் கொண்டுள்ளது. வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு வரம்புகள் மற்றும் உயரங்களை உள்ளடக்கியதாக இந்தியாவும் வைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் , இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.