ஹரியானாவில் தொடர்ந்து 3ஆவது முறையாாக பாஜக வெற்றிப்பெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக 2ஆவது முறையாக நயாப் சிங் சைனி பொறுப்பேற்கவுள்ளார். அவரது அரசியல் பயணம் குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்.
இந்தாண்டு தொடக்கத்தில் ஹரியானா மாநில அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. பாஜகவுக்கும், அதன் அரசில் அங்கம் வகித்த, ஜனநாயக ஜனதா கட்சிக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கூட்டணி உடையவே, ஹரியானா மாநில முதலமைச்சர் பதவியை, மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மார்ச் மாதம் அவர் பதவி விலகினார். இதனையடுத்து, ஹரியானாவின் புதிய முதலமைச்சர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. அப்போது, முன்மொழியப்பட்ட பெயர்தான், நயாப் சிங் சைனி.
கடந்த மார்ச் மாதம் முதல் ஹரியானாவின் முதலமைச்சராக செயல்பட்டு வரும் நயாப் சிங் சைனியை, மீண்டும் முதலமைச்சராக அறிவித்துள்ளது பாஜக தலைமை. ஹரியானாவில் மூத்த தலைவர்கள் பலர் உள்ள நிலையில், 2வது முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், கட்சியில் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.
1970ஆம் ஆண்டு ஹரியானாவில் உள்ள Mirzapur Majra என்ற பகுதியில் பிறந்தார், நயாப் சிங் சைனி. சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்த அவர், ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளால் கவரப்பட்டு, அந்த அமைப்பில் இணைந்தார். பின்னர், தனது 26ஆவது வயதில் பாஜகவில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட தலைவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த நயாப் சிங் சைனிக்கு, கட்சியில் படிப்படியாக முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2002ம் ஆண்டு அம்பாலா மாவட்ட பாஜக இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த 3 ஆண்டுகளில் அந்த மாவட்டத்தின் தலைவர் பொறுப்பே வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவராக இருந்தபோதும், மாநிலம் முழுவதும் அவர் கட்சி சார்ந்த பணிகளை செய்து தொடங்கினார். மாநிலத்தை தாண்டி, கட்சியின் தேசிய தலைமைகளிடமும் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட
வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி, வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.
இருந்தபோதும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் களம்கண்ட அவர், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் சென்றார். கட்சியில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த அவருக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்பட்டது.
2019 மக்களவைத் தேர்தலில் குருஷேக்த்ரா தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தும் அளவுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார்.
சாதாரண இளைஞரணி பொறுப்புடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நயாப் சிங் சைனி, கடந்தாண்டு ஹரியானா மாநில பாஜகவின் தலைவராக உருவெடுத்தார்.
இந்த பின்னணியில்தான், கடந்த மார்ச் மாதம் யாரை ஹரியானாவின் முதலமைச்சராக நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது, நயாப் சிங் சைனியின் பெயர் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதலமைச்சராக இருந்தபோதும், சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னான அரசிலும் அவரே முதலமைச்சராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு காரணம், ஹரியானாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் பலர், முதலமைச்சர் வேட்பாளராக தாங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என விரும்பினர்.
இருப்பினும், நயாப் சிங் சைனியின் தலைமையில்தான் பாஜக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் என்பதிலும், அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று, மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் என்பதிலும் டெல்லி தலைமை திடமான நம்பிக்கையுடன் இருந்தது.
பாஜக தலைமையின் அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஹரியானாவில் தொடர்ந்து 3ஆவது முறையாக பாஜகவுக்கு மகத்தான வெற்றியை தேடி தந்துள்ளார், நயாப் சிங் சைனி.
6 மாதங்கள் மட்டும் முதலமைச்சராக இருந்த சைனி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக முதலமைச்சராக இருந்து ஹரியானாவை வழிநடத்தவுள்ளார்.