2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 573 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு சமக்ர சிக்ஷா நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும், இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாகவும், நிர்வாக செயல்பாடுகள் முடிவடைந்த பிறகு தமிழக அரசுக்கான நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020-21 முதல் 2023-24-ம் கல்வியாண்டு வரையிலான 4 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக 7 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முன்மொழியப்பட்டதாகவும், அதில், 7 ஆயிரத்து 199 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.