ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தலில் கிஷ்வார் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் பாஜகவின் வேட்பாளர் ஷகுன் பரிஹார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியில் வாகை சூடியிருக்கும் ஷகுன் பரிஹார் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு , முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 29 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், முக்கிய வெற்றியாக கிஷ்த்வார் தொகுதியில் ஷகுன் பரிஹாரின் வெற்றி அமைந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வரலாற்றில், கிஷ்த்வார் தொகுதி தேசிய மாநாட்டுக் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 2014ம் ஆண்டு முதன்முறையாக பாஜக வேட்பாளர் சுனில் ஷர்மா இத் தொகுதியில் வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் பாஜக இதே தொகுதியைத் தக்க வைத்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில், தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பாஜகவின் உறுதிக்கு உதாரணமாகவே ஷகுன் பரிஹார் பாஜகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பிரதமரின் உறுதிக்கு ஆதரவாக, கிஷ்த்வார் தொகுதி மக்கள் ஷகுன் பரிஹாரை வெற்றிப் பெற வைத்திருக்கிறார்கள்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூத்த தேசிய மாநாட்டுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சஜ்ஜாத் அகமது கிச்லூவை விட 521 வாக்குகள் அதிகமாக பெற்று ஷகுன் பரிஹார் வெற்றி வாகை சூட்டியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கு முன்பாக, ஷகுன் பரிஹாரின் தந்தை அஜித் பரிஹார் மற்றும் அவரது மாமா அனில் பரிஹார் ஆகியோர் 2018ம் ஆண்டு, நவம்பர் ஒன்றாம் தேதி, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற 29 வயதான ஷகுன் பரிஹார், எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம்ஸ் பிரிவில் எம்டெக் பட்டம் பெற்றுள்ளார். தற்போது, ஜம்மு காஷ்மீர் அரசுப்பணித் தேர்வுக்கும் தயாராகி கொண்டிருக்கிறார்.
கல்விப் பணிகளில் கவனம் செலுத்திவரும் ஷகுன் பரிஹாருக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லாமல் இருந்தது. சமூகத்திற்கான கடமை உணர்வு மற்றும் தேசப்பணியில் அவரது குடும்ப மரபு ஆகியவையே அவரை அரசியலில் சேர வைத்திருக்கிறது.
தனது குடும்பம் உட்பட தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தீவிரவாதத்துக்கு எதிராக களம் இறங்கினார் ஷகுன் பரிஹார்.
இஸ்லாமியர்கள் அதிகமான வாழும் கிஷ்த்வார் தொகுதியில், பாதுகாப்பற்ற நிலையில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். முஸ்லீம்களுக்கும் இந்துகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் விரும்பிய பாஜக, இத்தொகுதியில், தீவிரவாதத்துக்குப் பலியான குடும்பத்திலிருந்து ஷகுன் பரிஹாரை வேட்பாளராக்கியது.
ஜம்மு காஷ்மீரில் அமைதி,முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக எல்லோரும் ஒன்றாக பாடுபடவேண்டும் என்பதையே தனது பிரச்சாரமாக்கினார் ஷகுன் பரிஹார்.
இப்போது வெற்றி பெற்ற நிலையிலும், தீவிரவாதத்துக்கு எதிராக போராடி நாட்டைப் பாதுகாப்பதில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் தனது நன்றியை ஷகுன் பரிஹார் தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தலில் பாஜக நிறுத்திய ஒரே பெண் வேட்பாளரான ஷகுன் பரிஹாரின் வெற்றி காஷ்மீர் மக்கள் தேசிய வாதத்தை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்று சவால்களைக் கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்கு பணியாற்ற போவதாக ஷகுன் பரிஹார் தெரிவித்துள்ளார்.