காஞ்சிபுரத்தில் 32-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 32ஆவது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பந்தலை நேற்று அகற்றிய போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட 616 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், மீண்டும் போராட்டத்தில் பங்கேற்க வந்த சாம்சங் தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்ட களத்திற்கு செல்லும் சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் ஆகிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போராட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படும் நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.