வரும் அக்டோபர் 13 மற்றும் 14 -ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல் , கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், வரும் 12 -ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. எனவே, வரும் 13 மற்றும் 14 -ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும், இதனால், அன்றைய தினம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, இன்று கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 14-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளனர்.