தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள ஏஐடியூ ஷேர் ஆட்டோ ஸ்டாண்டில், ஆயுத பூஜையை முன்னிட்டு 40 ஷேட் ஆட்டோ வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டு முழுவதும் தங்கள் குடும்பத்திற்காக உழைக்கும் வாகனங்களுக்கு இன்று ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது தங்கள் மனதிற்கு திருப்தியளிப்பதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலும் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொழிற்சாலைகளை நேற்றிரவே கழுவி சுத்தப்படுத்தி, அலங்காரங்கள் செய்த தொழிலாளர்கள், இன்று தொழிற்சாலைக்குள் சுவாமி படங்களை வைத்து தீபாராதனை காட்டி தொழில் சிறக்க பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
அதேபோல, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இன்று ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே ஊழியர்கள், ரயில்களுக்கு மலர் அலங்காரம் செய்து, வாழைக் கன்றுகள் கட்டியும், பொட்டு வைத்தும் பூஜை செய்து வழிபட்டனர்.
அப்போது ரயில்களுக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.