ஆயுத பூஜையையொட்டி சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, உரிமையாளர் கார் மற்றும் பைக்குகளை பரிசளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரி மற்றும் நாவலூரில் TEAM DETAILING SOLUTIONS என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் சார்பில் ஈஞ்சம்பாக்கத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. அப்போது நிறுவனத்தில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய 28 ஊழியர்களுக்கு காரும், 29 ஊழியர்களுக்கு பைக்கையும் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் கண்ணன் பரிசாக வழங்கினார்.
அப்போது உரிமையாளர் பேசியதாவது :
கடந்த 2005 ம் ஆண்டு 4 நபர்கள் மூலம் தொடங்கப்பட்ட நிறுவனம் தற்பொழுது 180 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் செம்மஞ்சேரி மற்றும் நாவலூர் ஆகிய பகுதிகளில் இரண்டு நிறுவனங்களாக வளர்ந்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக எனது நிறுவனத்திற்காக அயராமல் உழைத்து வரும் ஊழியர்களுக்கு கார், 7 வருடங்களுக்கு மேலாக உழைத்து வரும் ஊழியர்களுக்கு பைக் ஆகியவற்றை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
கடந்த பல வருடங்களாக ஊழியர்களுக்கு பரிசு வழங்கி வருவதாகவும், இது தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார். கார் இல்லாதவர்களுக்கு இந்த பரிசு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய அவர், சுமார் 3.5 கோடி மதிப்புடைய பரிசுகளை வழங்கியதாகவும் கூறினார். தாம் கார் வாங்கிய போது இருந்த சந்தோஷத்தை பிறருக்கு கொடுக்கும்போது அதிக சந்தோஷமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.