பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை தி.நகரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசி மதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோருக்கு நினைவு பரிசும், தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. அதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கபட்டன.
முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், Kelo இந்தியா திட்டம் மூலமாக பல விளையாட்டுகளில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள திறமையான மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம் என்று கூறினார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையான பாஜக ஆட்சி இந்தியாவை வல்லரசாக்கும் செயலின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர், சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டிற்காக பிரதமர் மோடி ஒயாமல் உழைக்கிறார் என தெரிவித்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற வாக்கியத்தை ஐ நா சபையில் பிரதமர் மோடி சொல்லி தமிழிற்கு பெருமை சேர்த்தார் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் நமது நாட்டின் விசேஷ தன்மையான யோகா தினம் கொண்டாடப்பட்டது என தெரிவித்தார். மேலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தவர் பிரதமர் மோடி என பெருமிதம் கூறினார்.
தொடர்ந்து பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோடிக்கணக்கான ஏழை மக்களை ஏழ்மையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளதாக கூறினார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
பின்னர் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஐநா சபைக்கு சென்றாலும், அயோத்திக்கு சென்றாலும் தமிழை நேசித்து வணங்க கூடியவர் பிரதமர் மோடி என பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாகபேசிய தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி எழுதிய Exam Warrior என்ற புத்தகத்தை மாணவர்கள் படித்தால், தேர்வுகள் மீதான பயம் போகும் என்றும், மன் கி பாத் மூலம் மாணவர்களிடையே பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் கூறினார்.