அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், பாஜக அனைத்து கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது.
ஹரியானாவில் தொடர்ந்து பத்தாண்டு கால ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றியைப் பாஜக பெற்றுள்ளது.
அதே போல், 370- சட்ட பிரிவை நீக்கிய பின் நடந்த முதல் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில், அதிக வாக்கு சதவீதத்துடன் 29 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்த இருமாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு நாளுக்குப் பிறகு கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடனான கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடை பெற்றது.
தங்கள் குறைகள் உடனடியாக தீர்க்கப்படுவதால் பாஜக ஆட்சியின் மீதான நம்பிக்கை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் மக்கள் குறைகள் உட்பட 4.5 கோடி கடிதங்கள் பிரதமர் அலுவலகத்து வந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், வெறும் 5 லட்சம் புகார் கடிதங்களே அரசுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கான முயற்சிகள் பொதுமக்களால் அங்கீகரிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே, ஹரியானாவில் வெற்றியும், ஜம்மு காஷ்மீரில் அதிகமான வளர்ச்சியும் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதனால், அரசு அலுவலகங்களில் மேஜைக்கு மேஜை, கோப்புக்கள் தள்ளப்பட்டு,தேங்கி கிடக்காமல், பொதுமக்களின் குறைகளை முழுமையாகவும், விரைவாகவும் நிறைவேறுவதை உறுதி செய்யுமாறு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட நாளை கட்டாயம் ஒதுக்குமாறு துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி, அமைச்சர்கள் இந்த செயல்முறையை மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தகுதியற்ற ஊழியர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் விதிகளைச் சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, தொடர்ச்சியான மக்கள் சேவைக்குத் தகுதியற்றதாகக் கருதப்படும் எந்தவொரு அரசு ஊழியரையும் பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசின் மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதியம் விதிகளின் அடிப்படை விதி 56 (j), அரசின் நிர்வாகத்தில் அதிக செயல்திறனை உறுதி செய்வதற்காக, அரசு ஊழியர்களின் முன்கூட்டிய ஓய்வுக்கான வழிகாட்டுதல்களைக் கூறுகிறது .
அதன் படி, 50 முதல் 55 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டு, திறமையின்மை கண்டறியப்பட்டால், நியமன அதிகாரி, அந்த அரசு ஊழியரைப் பொதுநலன் கருதி, பதவியிலிருந்து நீக்க முடியும்.
கூடுதலாக, 48 வது விதியின் படி, 30 ஆண்டுகளாக அரசு பணியிலிருக்கும் ஒரு ஊழியரின் பணி மதிப்பீட்டின் அடிப்படையில், நியமன அதிகாரி, அவரை “பொது நலன்” கருதி பதவி நீக்கலாம்.
திறனற்ற அரசு ஊழியருக்கு,மூன்று மாத முன் அறிவிப்பு அல்லது மூன்று மாத ஊதியம் மற்றும் படிகளை வழங்க வேண்டும் என்றும் அரசு விதிகள் சொல்கின்றன
மேலும், அரசு ஊழியர்களின் மறுஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, 50 வயதிலிருந்து 55 வயதை அடையும் வரை அல்லது 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணி முடித்த அரசு ஊழியர்களின் திறன் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் துறை ரீதியாக பதிலளிக்கவும், இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்லவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதியம் விதிகளைப் பயன்படுத்தி இதுவரை 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு அரசுத் துறைகள் கட்டாய ஓய்வு அளித்திருக்கின்றன.
அரசு ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவும், அரசு விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.