திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற நம்பெருமாள் அம்பு போடும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 4-ம் தேதி தொடங்கி நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விழாவின் நிறைவாக 11-ம் நாளன்று நம்பெருமாள் வன்னிமரத்தில் உள்ள அசுரனை வதம்செய்யும் நிகழ்வான “அம்பு போடும்” வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நம்பெருமாள் திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீ காட்டழகிய சிங்கர்கோயில் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்புபோடும் நிகழ்வினை நிகழ்த்தினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.