டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லி பாரத் மண்டபத்தில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு குறித்த கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பத்தில் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் செல்போன் பயனாளர்களாக உள்ளதாவும், அதில் 90 கோடி பேர் இணையவசதியை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். 2014-ல் இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி அலகுகள் இருந்ததாகவும், தற்போது அவை 200ஆக அதிகரித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செல்போன்களை உலகிற்கு வழங்கும் பணியில் தற்போது இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற செய்தியை வழங்கியபோன்று, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய மாநாட்டின் மூலம் மோதலில் இருந்து உலகை இணைக்கும் பணியை இந்தியா மேற்கொள்ளும் என தெரிவித்தார்.