தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு, சுரங்கபாதைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை பெரம்பூர் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நெடுந்தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுராந்தகம், மறைமலைநகர், செய்யூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் பாதியளவு மூழ்கிய நிலையில் கார்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.