ஹரியானா முதலமைச்சராக நயப் சிங் சைனி இன்று மீண்டும் பதவியேற்றார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக தேர்வானது.
இந்த நிலையில், சண்டீகரில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி அம்மாநில முதலமைச்சர் நயப் சிங் சைனி மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், ஹரியானா முதலமைச்சராக நயப் சிங் சைனி இன்று மீண்டும் பதவியேற்றார் . அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக சிலர் பதவியேற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.