அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வீரபாரதி என்பவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார்.
இதனையடுத்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரபாரதி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளன் வழக்கிலான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனவும், அதனை ஆளுநர் மீற முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.