ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. 2 மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் தோட்ட சாலை, தங்க சாலை வீதி, நம்பியூர் சாலை, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்கியது,
மேலும் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்வதாலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்குவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.