சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தீட்சிதர் பணிநீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடைகோரி, பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என கருத்து தெரிவித்தார்.
மனக்கஷ்டங்களை போக்க கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர் என தெரிவித்த நீதிபதி, நடராஜர் கோயிலில் தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சண்டைக்கு வருவதுபோல் தீட்சிதர்கள் நினைப்பதாக கூறிய நீதிபதி, காசு கொடுத்தால்தான் பூ, இல்லையென்றால் விபூதிகூட கிடைக்காது எனவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், பக்தர்கள் வரும் வரைதான் கோயில் கோயிலாக இருக்கும் எனவும், இல்லையென்றால் கோயில் பாழாகிவிடும் எனவும் கருத்து தெரிவித்த நீதிபதி தண்டபாணி, தீட்சிதர்கள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு வரும் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.