ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்த நபரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கோபவரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை விக்னேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். விக்னேஷ்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான நிலையில், தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் விக்னேஷ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நீ இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கமாட்டேன் எனக்கூறி மாணவியை காட்டுப்பகுதிக்கு விக்னேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து காட்டுப்பகுதிக்கு சென்ற மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற விக்னேஷ், தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் கொண்டு மாணவியின் ஆடையில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.