தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேதகு ஆளுநரை, தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“உதயநிதி அவர்கள் ஆளுநர் குறித்து, சட்டத்திற்கு புறம்பாக கண்ணியமற்ற முறையில் கடந்த ஆண்டு பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று தமிழகத்தில் மோசமான தனிநபர் தாக்குதலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், ஆண்டுகள் பல கடந்தாலும் குற்றச்சாட்டுகள் பதியப்படுகின்றன. வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.
தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பவர்களும் உண்டு.
அந்த வரிசையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய பேச்சுக்கள் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு மேதகு ஆளுநர்ஆர்.என்.ரவி பற்றி கூறிய கருத்துக்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழகத்தில் அருவருக்கத் தக்க தனிநபர் தாக்குதல் மறைந்து, கண்ணியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.
அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மூத்த தலைவர்களே, தங்களுடைய வாரிசுகளை தூண்டிவிட்டு அருவருப்பான அரசியல் விளம்பரத்திற்காக, தங்கள் கட்சியினர், வாரிசுகள், பேசும் அருவருக்கத்தக்க பேச்சுக்களை ரசித்து அழகு பார்ப்பது தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அரசியலுக்கு வர வேண்டும். எதிர்கால இளைய தலைமுறை அரசியல் விழிப்புணர்ச்சி பெற்று, சமத்துவமும் சமூக நீதியும் மலர வேண்டும்என்று விரும்பும் நம்i அனைவருக்கும் அதிர்ச்சியை தரக்கூடிய வகையில் உருவாகி வரும் சுய லாபத்திற்கான, விளம்பரம் மோகத்திற்கான வெறுப்பு அரசியல் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
புதிதாக அரசியல் ஈடுபடக்கூடிய இளைய சமுதாயத்தை தவறான முறையில் வழி நடத்துவது, தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் நாம் செய்யும் துரோகம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.
இனி தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து,
தனி நபர் தாக்குதல்களை புறம் தள்ளி, மனிதநேயத்தோடு பரஸ்பரம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களைi தெரிவிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறையை அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அதேபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக,தந்தையாக முதல்வராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.