மதரஸா மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும், மதரஸா பள்ளிகளை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உத்திரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதரசா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை மற்றும் சிறுபான்மையினர் உரிமையை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிறுபான்மையினர் நடத்தக் கூடிய பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்துடன், மதரசா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்த உத்தரப்பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.