சென்னையில், இரவுப் பணியில் இருந்த ரோந்துக் காவலர்களிடம் அத்துமீறி தகாத முறையில் பேசிய ஜோடியை, தனிப்படை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நடந்த செயலுக்கு மன்னிப்புக் கோரிய அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.
மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் ரோந்துப் பணியில் இருந்த போது சாலையில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறியதற்காக ஒரு ஜோடி பேசியது சற்றே Jerk-ஐ ஏற்படுத்தியது…
உதயநிதியை எனக்குத் தெரியும்…வரச்சொல்லட்டுமா?
இதுமட்டுமின்றி, பணியில் இருந்த காவல்துறையினரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அந்த நபரும், அவருடன் இருந்த பெண்ணும் எல்லை மீறிப் பேசினர்…. இருவரும் போதையில் இருந்ததை அறிந்த போலீசார் அவர்களுடன் பெரிதாக வாக்குவாதம் செய்யாமல், அங்கு நடந்த சம்பவத்தை மொபைலில் பதிவு செய்தனர்….
பட்டினப்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் அந்த ஜோடி செய்த அலப்பறை தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறையினருக்கே டஃப் கொடுத்த அந்த ஜோடி பற்றி ரோந்துப் பணியில் இருந்த காவலர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்த ஜோடியை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேளச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் அவர்களை தனிப்படை போலீசார் தட்டித் தூக்கினர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சந்திர மோகன் என்பதும், வேளச்சேரியை சேர்ந்த அவர், கார் வாங்கி விற்கும் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.
அவருடன் இணைந்து காவலர்களை கடுப்பேற்றிய பெண்ணின் பெயர் தனலட்சுமி என்பதும், அவர் மயிலாப்பூரில் வசிப்பதும் தெரியவந்தது. இருவரும் கணவன், மனைவி அல்ல என்றும், அவர்களுக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததையும் காவலர்கள் அறிந்தனர். இதைடுத்து, அங்கிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அந்த ஜோடியை அழைத்து வந்த போது நடந்த சம்பவங்கள் வேற லெவல்….
போதையில் இருந்த போது எந்த வித தயக்கமும் இன்றி தரக்குறைவாக பேசிய அந்த நபர், காவல் நிலையத்தில் செய்தியாளர்களின் கேமராவை கண்டதும் தலை தெறிக்க ஓடினார்…
கடைசியாக இந்த சம்பவத்தில் நடந்த ட்விஸ்ட் என்னவென்றால்…. போதையில் இருந்த காரணத்தால் காவல்துறையினரைப் பற்றி தரக்குறைவாக பேசினேன்… மன்னித்து விடுங்கள் என அவர் வருத்தம் தெரிவித்த வீடியோவை சென்னை காவல்துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டது….
மெரினா கடற்கரை அருகே நள்ளிரவில் காவலர்களுடன் அடாவடி செய்த ஜோடியை, ஒரே நாளில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி இருக்கிறது….