மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறை மீண்டும் 100 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை 27-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததாலும் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது.
தற்போது, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. 29 நாள்களுக்கு பிறகு 2-வது முறையாக அணையின் நீர் மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரத்து 586 கன அடியிலிருந்து 29 ஆயிரத்து 850 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை 72 -வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.