விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என, குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னைக்கு அவர்களால் நேரில் வர இயலாததால், அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், குற்ற வழக்குகளில்தான் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராவது கட்டாயம் எனவும், பிற வழக்குகளில் காணொலி வாயிலாகவே ஆஜராகலாம் எனவும் தெரிவித்தது.
மேலும், சம்மந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என கூறிய நீதிமன்றம், விவாகரத்து வழக்கை காணொலி மூலம் விசாரிக்க, குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.