இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2000ம் ஆண்டிலிருந்து இந்தியாவும் ஜெர்மனியும் புவிசார் அரசியலில் ஒரு கூட்டுறவை கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளாகவே, இருநாடுகளும், பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றி வருகின்றன. பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், 50 ஆண்டு கால ஒத்துழைப்பை இருநாடுகளும் கொண்டுள்ளன.
நிலையான வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவும் ஜெர்மனியும் பல ஆண்டுகளாக ஒத்துழைத்து வருகின்றன.
ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காகவும், அதே ஆண்டு செப்டம்பரில் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஒரே ஆண்டில் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்திருந்தார்.
இப்போது, மீண்டும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்திய-ஜெர்மன் அரசாங்கத்தின் ஏழாவது சுற்று ஆலோசனைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு முன் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியுள்ளார்.
நிலையான தொழில் வளர்ச்சி, திறமையான இளம் தொழில் முனைவோர்களின் திறமை, மற்றும் மலிவான விலையில் சிறந்த உற்பத்தி ஆகியவை அடிப்படையில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது.
ஏற்றுமதியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை ஜெர்மனி கண்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக மோதலால், ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
உக்ரைன் போருக்கு முன், மலிவான ரஷ்ய எரிவாயுவை நம்பியிருந்த ஜெர்மனி, சீனாவுடனான வர்த்தக உறவை குறைக்க திட்டமிடுகிறது. இதனால் , ஜெர்மன் நிறுவனங்கள், இந்தியா மீது ஆர்வம் காட்டுகின்றன.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஜெர்மனியின் நேரடி முதலீடுகள் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது சீனாவில் செய்யப்பட்டுள்ள ஜெர்மன் முதலீட்டில், சுமார் 20 சதவீதமாகும். அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவில் ஜெர்மன் முதலீடுகள் 40 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் ஒரு பிரகாசமான வாய்ப்பு தங்களுக்கு உள்ளது என்று ஜெர்மன் நிறுவனங்கள் நம்புகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் வருவாய் அதிகரிக்கும் என்று 82 சதவீத பேர் கூறியுள்ளனர். 59 சதவீதம் பேர் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, ஜெர்மன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DHL, இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுக்குள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தையில் சுமார் அரை பில்லியன் யூரோக்களை DHL முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஜெர்மன் நிறுவனமான Volkswagen, நிறுவனம், சீனாவில் விற்பனை வீழ்ச்சியாலும், உள்நாட்டில் அதிக உற்பத்திச் செலவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கூட்டு உற்பத்திக்காக புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள Volkswagen, கடந்த பிப்ரவரியில் இந்தியாவின் மஹிந்திராவுடன் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
இதுபோல, எஞ்சின் தயாரிப்பாளரான Deutz, உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரான இந்தியாவின் TAFE-வின் துணை நிறுவனமான TAFE மோட்டார்ஸ் உடன் 30,000 Deutz இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த ஆண்டு ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.