சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
சிதம்பரம் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985, 1988 ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆஜரான பொது தீட்சதர்கள் தரப்பு, கோயில் நிலங்களை விற்பனை செய்ததாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது என தெரிவித்தது.
மேலும் கோயில் நிலங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து அறநிலையத்துறை சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளிக்க தீட்சிதர்கள் தரப்புக்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.