சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் பிரதமர் மோடி முன் வைத்த யோசனைகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் நதிப் பள்ளத்தாக்கில் ஒரு முக்கியமான விமானத் தளத்துடன் இணைக்கும் சாலை அமைக்கும் இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் சீனா கடும் எதிர்ப்பு காட்டியது.
அதன் தொடர்ச்சியாக, 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் எல்லைப் பகுதியில், இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பல சீன வீரர்களும் இறந்தனர்.
அதன் பிறகு, 2021ம் ஆண்டு ஜனவரியில், சிக்கிம் எல்லையில், நகு லா கணவாய் அருகே இருநாட்டு துருப்புக்களும் மோதிக்கொண்டன. அதே ஆண்டு செப்டம்பரில், பாங்காங் ஏரிக்கு அருகே இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு, டிசம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லை பகுதியில், சீனா மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதனை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்தார். டிக் டாக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்டது. சீனர்களுக்கான விசா நடைமுறைகளில் புதிய கடுமையான விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
சீன முதலீடுகள் விஷயத்திலும் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பபட்டன. பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை, இந்தியாவில் மின்சார வாகனங்களை உருவாக்க திட்டமிட்டிருந்த BYD நிறுவனத்தின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு திட்டம் உட்பட பல முதலீட்டு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.
அதே நேரத்தில், தெற்காசியாவின் மிக பெரிய உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கு, சீன வணிகங்களை ஈர்ப்பது அவசியம் என்று இந்திய பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். ஆனாலும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத முதலீட்டு திட்டங்களில் அனுமதிக்க தேசிய பாதுகாப்புத் துறை முடிவெடுத்தது.
இந்நிலையில், உள்நாட்டு தொழில் துறையில் நெருக்கடி, சீன தொழில் நுட்பத்தின் மீதான அமெரிக்காவின் வர்த்தக தடை, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் சீனாவும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சீனா உற்பத்தி பொருட்களுக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், சீனாவின் நிலைமை இன்னும் மோசமாகலாம்.
சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சனை தொடர்பான இராணுவ மோதல்கள் இருந்த போதிலும், கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கவில்லை.
2022ஆம் ஆண்டு,135.98 பில்லியன்அமெரிக்க டாலராக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 2023 ஆம் ஆண்டில், 136 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள் மற்றும் இரசாயனங்கள் மற்றும் மருந்துகளின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவிலிருந்துதான் வந்துள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப் படி, சீனாவிலிருந்து இறக்குமதிகள் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் வகிக்கிறது.
கடந்த வாரம், இந்தியாவும் சீனாவும் Line of Actual Control எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. இதை தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
அதன்பிறகு, இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஸ்திரப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசாக்களை விரைவாகக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடங்கும் என்றும், இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவையும் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீன உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், சீன முதலீட்டுத் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
கூடுதலாக, மின்னணு மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களில் 10 சதவீத சீன முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தையும் இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இது புறம் இருக்க, டிக்டாக் போன்ற சீன செயலிகளுக்கான தடை நீடிக்கும் என்றும், சீன பொருட்கள் வரிவிதிப்பில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு அணு சக்தி நாடுகளுக்கு இடையேயான உறவுகள் இனி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.