கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு காவல் நிலையத்தில் 21 முறை புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் தனது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சி.வி.சண்முகம் சந்திக்க சென்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்றிருப்பதாக சக போலீசார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சி.வி.சண்முகம், தான் வருவது தெரிந்து வேண்டுமென்றே காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்றிருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் தம்மை சந்திக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட நுழைவு வளாக பகுதியில் சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.