சர்வதேச அளவில், AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா இருந்தது. சமீபத்தில் அறிமுகமான சீனாவின் DeepSeek, அமெரிக்க AI நிறுவனங்களையே ஓரங்கட்டி விட்டது. தொடர்ந்து, சீனா AI துறையில் முதலிடத்தைப் பிடிக்க வேகமாக முன்னேறுகிறது.
இந்நிலையில், AI தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவை விட இந்தியா பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை Zerodha நிறுவனர் நிதின் காமத் விளக்கியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும், சமூக சவால்களை தீர்க்கவும் AI அடிப்படை தொழில்நுட்பம் தேவையான ஒன்றாகிவிட்டது.
அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக AI ஆகி விட்டது. எனவே AI ஆராய்ச்சியில் நிறைய பணத்தை அனைத்து நாடுகளும் முதலீடு செய்கின்றன.
AI தொழில்நுட்பத்தில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. இதில், சீனாவின் DEEP SEEK கடந்த வாரம் ,அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்துள்ளது.
அறிமுகமான ஏழே நாட்களில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகமான பதிவிறக்கம் செய்யப்பட்ட AI என்ற சாதனையை DEEP SAKE படைத்தது. OpenAI, ChatGPT, Gemini, META வைப் பின்னுக்குத் தள்ளியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், சீனா வெறும் 6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், DEEP SEEKயை உருவாக்கி இருக்கிறது.
அமெரிக்காவுக்கு மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கும் DEEP SEEK ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் சுழலில், AI தொழில் நுட்ப துறையில் இந்தியாவுக்கு என்னென்ன தடைகள் உள்ளன என்பதை, Zerodha நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிதின் காமத் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் திறமையான மற்றும் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் இருந்தாலும், அவர்களுக்கான ஏற்ற ஆராய்ச்சி சூழலும், தேவையான நிதியுதவியும் இருந்தால், இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களும் சாதனை படைப்பார்கள் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
AI ஆராய்ச்சியில் நாடுகள் நிறைய பணத்தை முதலீடு செய்து வருகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில், AI ஆராய்ச்சிக்காக, இந்தியா 6 பில்லியன் அமெரிக்க டாலரை செலவழிக்கும் என்று சர்வதேச தரவுக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அதே ஆண்டில், AI ஆராய்ச்சிக்காக, உலகளாவிய செலவு 512 பில்லியனை எட்டும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது. AI ஆராய்ச்சி பட்டியலில், இந்தியா 14 வது இடத்தில் உள்ளது. இது உலகளாவிய AI ஆராய்ச்சி பங்கில் வெறும் 1.4 சதவீதமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
AI ஆராய்ச்சி நிதி ஒதுக்கீட்டில், 30.4 சதவீதம் மற்றும் 22.8 சதவீதம் பங்களிப்புடன், அமெரிக்காவும் சீனாவும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளன.
AI தொழில்நுட்பத்தில், சீனா மற்றும் அமெரிக்காவுடன் போட்டி போட வேண்டும் என்றால், இந்தியா AI ஆராய்ச்சிக்கான நிதியை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
AI துறையில், ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை விட இந்தியா பன்மடங்கு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் AI தொழில்துறை 2027 ஆம் ஆண்டுக்குள்17 பில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை எட்டும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக செலவழிக்கும் குறைவான செலவினம் AI வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.64 சதவீதம் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சீனாவின் 2.41 சதவீதம் மற்றும் அமெரிக்காவின் 3.47 சதவீதம் மற்றும் இஸ்ரேலின் 5.71 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.
இந்தியாவில் ஏற்கனவே 6,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன. குறைந்த நிதியுதவி, அதிநவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கான ஸ்டார்ட்-அப்களின் திறனைக் குறைக்கிறது என்றும், இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளைக் குறைக்கிறது என்றும் Zerodha நிறுவனர் நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
AI உள்கட்டமைப்பு மற்றும் ஸ்டார்ட்-அப்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு
ஐந்து ஆண்டுகளில் 10,372 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்,10,000 ஜிபியுக்களை வழங்க , மத்திய அரசு, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
AI ஸ்டார்ட்-அப்களுக்கான அரசின் நிதியுதவி, AI துறையில் இந்தியா சீனாவை விரைவில் முந்தும் என்று கூறப்படுகிறது.