அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, எஃப்.ஐ.ஆர். கசிந்ததன் அடிப்படையில் பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்தியது.
அப்போது விசாரணைக்கு ஆஜரான பத்திரிகையாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு பறிமுதல் செய்ததைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன் என காவல் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா என்றும், அவரது வாக்குமூலம் எங்கே என்றும் காவல் துறையிடம் நீதிபதி கேள்விக்கணைகளை தொடுத்தார்.