எதிர்காலத்தில் அரசு துறைகளில், விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து, பதில் அளிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா என்பவர், பணி நிரந்தரம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை காட்டமாக விமர்சித்த நீதிபதிகள், எதிர்காலத்தில், அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.