சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் மொபைல் போன் பயன்படுத்தியதே விபத்திற்கு காரணம் எனக்கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த பேருந்தின் உரிமத்தை சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஏற்கனவே ரத்து செய்து விட்டதாகவும், கண்டம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்ட பேருந்து மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த உண்மையை மூடி மறைக்கவே ஓட்டுநர் மீது மட்டுமே தவறு என பழி சுமத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாழடைந்த பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாகவும் , திமுக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி சபரி வலியுறுத்தியுள்ளார்.