மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை ‘லூப்’ சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லுாப் சாலையில் உள்ள மீன் வியாரிபாரிகளுக்கு கட்டப்பட்ட கடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீன் வியாபாரிகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு 356 கடைகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தற்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகக் கூறினர்.
அந்த சாலையின் இருபுறமும் மீன் கடைகள் அல்லாமல் மற்ற உணவு பொருட்களை விற்கும் நபர்களின் வாகனங்களும் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். எனவே, கடற்கரையில் இருந்து சாந்தோம் செல்ல இந்த சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.