ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ரத்தம் சொட்ட சொட்ட வந்த ஒருவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
மணல் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவர், 3 அடிக்கு அதிகமாக மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை மீறி மணல் மணல் அள்ளிய சிலர் குறித்து அண்மையில் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் சிலர் அவரை காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் நயினார் கோவில் அருகே, ராதாகிருஷ்ணனை இறக்கி அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.