தமிழ் மொழியின் பெருமையை கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் – காசி இடையிலான பந்தத்தை வலுப்படுத்தும் 3-வது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, கடந்த 2022 ஆம் ஆண்டு, காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, மூன்றாவது ஆண்டாக, இந்த வருடம், கயிலை மலையில் இருந்து தமிழகத்தின் பொதிகை மலைக்கு வந்த அகத்திய மாமுனிவரைப் போற்றும் நிகழ்ச்சியாக நடைபெறுவதாக தெரவித்தார். ஒரே பாரதம், உன்னத பாரதத்தை காசி தமிழ்ச் சங்கமம் வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை கூறினார்.
நமது பிரதமர் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம், அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, காசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதிக்கு இருக்கை என, தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இன்று, தமிழகத்தில் இருந்து சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தாய்மார்கள், சகோதரிகள், முத்ரா திட்டத்தின் பயனாளிகள் என 200 பேர், பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது, அனைவருக்கும் மன நிறைவாக அமைந்ததாகவும் அண்ணாமலை கூறினார்.