“அப்பா” செயலியை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை ராம்நகர் பகுதியில் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், மும்மொழிக்கொள்கையை தொடர்ந்து எதிர்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் திமுக-வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி உள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் வகையில் ஏன் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தார்கள் என கேள்வி எழுப்பிய அவர், மூடப்பட்ட அரசு பள்ளிகளால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து முதலமைச்சர் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.