கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
கோவை பீளமேடு பகுதியில் 12 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதியதாக மாநகர் மாவட்ட பாஜக அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த பிரமாண்ட கட்டடத்தில் மொத்தம் 15 அறைகள் அமைந்துள்ளன. இதில் 400 பேர் அமரும் வகையிலான அடல் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதியதாக அமைக்கப்பட்ட பாஜக அலுவலகங்களையும் அமித்ஷா காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,
பாஜக தொடங்கப்பட்டதன் நோக்கத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நிறைவேற்றி வருகிறார்கள் என தெரிவித்தார். 370-வது சட்டப்பிரிவு ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.