தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
நிகழ் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.