குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில், நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7வது கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி, பல முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலக நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதமாகும். உலகில் உள்ள அறியப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் 7 முதல் 8 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன.
அனைத்து விலங்கு இனங்களிலும் 7.6 சதவீதம் இந்தியாவில் உள்ளன. அனைத்து பறவை இனங்களில் 12.6 சதவீதம் இந்தியாவில் உள்ளன. ஊர்வன என்ற வகையில் 6.2 சதவீதமும், பூக்கும் தாவரங்களில் 6.0 சதவீதமும் இந்தியாவில் உள்ளன.
இந்தியா 500 வகையான புலம்பெயர்ந்த பறவைகளின் தாயகமாகும். இதனால் தான் உலகின் 17 மெகா-பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 35 பல்லுயிர் மையங்களில் நான்கு இந்தியாவில் உள்ளன. இவை பூமியின் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய களஞ்சியங்களாகும்.
இந்த பரந்த இயற்கை பன்முகத் தன்மையைப் பாதுகாக்க, இந்தியா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டில் 106க்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்கள் உள்ளன. 515 விலங்கு சரணாலயங்கள், 75 ஈரநில தளங்கள்,18 உயிரி-சரணாலயங்கள் உள்ளன.
உலக வனவிலங்கு தினம் என்பது வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும் அவசரத் தேவை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான நாளாகும்.
இந்த ஆண்டு உலக வனவிலங்கு தினத்தை ஒட்டி, குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவின் தலைமையகமான சாசன் கிரில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஏழாவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பு தொடபாக பல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆற்றங்கரை டால்பின் குறித்த மதிப்பீட்டு அறிக்கையும் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது
இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களில் உள்ள 28 ஆறுகளில், மொத்தம் 6,327 டால்பின்கள் உள்ளதாக மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் உள்ளன. அடுத்து, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் அதிகமான டால்பின்கள் உள்ளன.
கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1,411 ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167 ஆக உயர்ந்தது. உலகின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதத்துக்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் தான் உள்ளன.
தற்போது இந்தியாவில் 29,964 காட்டு ஆசிய யானைகள் உள்ளன. இது உலகின் மொத்த யானைகள் எண்ணிக்கையில் 60 சதவீதமாகும்.
கடந்த 1913 ஆம் ஆண்டில், வெறும் 20 சிங்கங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தன. தற்போது குஜராத்தில் 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 674 சிங்கங்கள் வசிக்கின்றன.
2020-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று ஆசிய சிங்கங்களை பாதுகாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்தார்.
இந்த ஆசிய சிங்கங்களை பாதுகாக்க 2,927 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 16வது ஆசிய சிங்க எண்ணிக்கை கணக்கெடுப்பு இந்த ஆண்டில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் SACON வளாகத்தில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்புக்கான உயர்தர மையம் நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவிசார் தகவல் நிறுவனம் (BISAG-N) இடையே ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜூனகத் மாவட்டத்தில் உள்ள நியூ பிபால்யாவில் 20.24 ஹெக்டேர் நிலப்பரப்பில் வனவிலங்குகளுக்கான தேசிய பரிந்துரை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, வனவிலங்கு சுகாதாரம் மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விளக்கியுள்ளார்.
மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த பாரம்பரிய அறிவு மற்றும் கையெழுத்துப் பிரதிகளை சேகரிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் முழுவதும் பரந்த அளவில் செயல்படுத்துவதற்காக AI உதவியுடன் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார்.
வனவிலங்கு கண்காணிப்புக்கான உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு மையம் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக சாசனில் ஒரு அதிநவீன மருத்துவமனையும் அமைக்கப் படுகிறது.
இதற்கிடையே, உலக நாடுகளில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடம் என்ற பெருமையை பெற்றுள்ள கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் லயன் சவாரியை (Lion safari) மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த புகைப்படங்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்பு என்பது ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறிவருகிறது. இந்நிலையில், கடந்த பத்தாண்டுகளில், வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் தன்னை உலகத் தலைவராக இந்தியா நிலைநிறுத்தியுள்ளது