தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தேனியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தான் மின் உற்பத்தி கழக அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்ததாகக் கூறியிருந்தார்.
தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காததாலும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாததால் தன்னை பணியில் இருந்து நிறுத்தி வைத்ததாக தெரிவித்திருந்தார்.
தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் எனவே மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில், மனுதாரரின் தந்தை கப்பலில் வேலை பார்த்த நிலையில் அவர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை எனவும் தற்போது மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றதால் பணி வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.
மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில் பொது பணிக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.