டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத்துறையின் சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், அரசின் அனுமதி பெறாமல் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் முதல் காவலாளி வரை அனைவரிடம் விசாரணை நடத்தியதற்கான சிசிடிவி காட்சிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
மேலும், இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது எனவும் அமலாக்கத்துறைக்குக் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு, இரவில் சோதனை நடத்தப்படவில்லை என்றும், அனைவரும் வீடு திரும்பியதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், விசாரணை என்ற பெயரில் யாரும் துன்புறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை தனது அதிகாரத்தைச் செயல்படுத்திய விதத்தைத்தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறிய நீதிபதிகள், அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், அதுவரை, அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 25ஆம் தேதி ஒத்திவைத்தனர்.