திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தைத் தவறுதலாக வேறு நபருக்குப் பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் குடி மங்கலத்தைச் சேர்ந்த சுப்பா நாயக்கர் என்பவர், தர்ம தண்ணீர் பந்தல் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, சுமார் 4 ஏக்கர் நிலத்தை, 1917-ம் ஆண்டு எழுதி வைத்தார்.
இந்த நிலத்தை வெங்கடசாமி என்பவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக, அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி, கே.சவுந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நில அளவையைப் புதுப்பிக்கும்போது, தவறுதலாகப் பட்டா பெயர் மாற்றப்பட்டு விட்டதாகவும், அதனை ரத்து செய்து, நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் பெயருக்குப் பட்டா வழங்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக மனுதாரர், எதிர் மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி, உண்மையான உரிமையாளர் பெயருக்குப் பட்டா வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.