டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரசு அனுமதியின்றி டாஸ்மாக் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கூறி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சோதனையில் அரசு அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி வாதிட்டார்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள் வாய்மொழி உத்தரவுகள் எதையும் நீதிமன்றம் பின்பற்றாது எனவும், அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.