கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : கடந்த 2015 – 16 ஆண்டுகளில் ₹2,300 ஆக இருந்த விலையை, கடந்த பத்து ஆண்டுகளில் ₹1,250 அதிகரித்து வழங்குகிறது மத்திய அரசு என தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது 2021 தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, கரும்பு ஒரு டன்னுக்கு ₹2,850 வழங்கியது மத்திய அரசு. மீதமுள்ள ₹1,150 விலையை சேர்த்து, விவசாயிகளுக்கு ₹4,000 ஆக திமுக அரசு வழங்கும் என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அமைச்சர்கள் பொய் கூறிக் கொண்டிருந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ₹4,000 வழங்குவதாகக் கூறியது திமுக அரசு. தற்போது மத்திய அரசு கரும்பு ஒரு டன்னுக்கு, ₹3,550 வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் அந்த ₹1,150 சேர்த்து, ஒரு டன்னுக்கு ₹4,700 ஆக, கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு வழங்குவதுதான் நியாயம். ஒவ்வொரு ஆண்டும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் தமிழக விவசாயிகளை ஏமாற்றி வரும் திமுக அரசு, இதற்கு மேலும் தமிழக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.